குறள் 501-510 தெரிந்துதெளிதல்

குறள் 501:.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும்.

Tamil meaning
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

English meaning
Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.

குறள் 502:.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாணுடையான் சுட்டே தெளிவு.

Tamil meaning
குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

English meaning
(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).

குறள் 503:.
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 
இன்மை அரிதே வெளிறு.

Tamil meaning
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.

English meaning
When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.

குறள் 504:.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல்.

Tamil meaning
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

English meaning
Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

குறள் 505:.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்.

Tamil meaning
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

English meaning
A man's deeds are the touchstone of his greatness and littleness.

குறள் 506:.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் 
பற்றிலர் நாணார் பழி.

Tamil meaning
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

English meaning
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.

குறள் 507:.
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் 
பேதைமை எல்லாந் தரும்.

Tamil meaning
அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

English meaning
To choose ignorant men, through partiality, is the height of folly.

குறள் 508:.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.

Tamil meaning
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

English meaning
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.

குறள் 509:.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் 
தேறுக தேறும் பொருள்.

Tamil meaning
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.

English meaning
Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.

குறள் 510:.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 
தீரா இடும்பை தரும்.

Tamil meaning
ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைச்  சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.

English meaning
To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.

No comments:

Post a Comment